ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி புதுவை வாலிபர் உட்பட 7 பேரிடம் ₹10.19 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி, ஜூன் 29: புதுவையில் வாலிபர் உட்பட 7 பேர் ரூ.10.19 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். புதுச்சேரி மூலகுளம் பகுதியை சேர்ந்த பழனிகுமார் என்பவரை மர்ம நபர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தபடி பகுதி நேரம் வேலை செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பி பழனிகுமார் ரூ.5.09 லட்சத்தை முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார். பின்னர் சம்பாதித்த பணத்தை எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. இதேபோல் திருக்கனூர் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவரும் வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறியதை நம்பி ரூ.2.50 லட்சம் முதலீடு செய்து, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளார். இதேபோல் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரவீனா என்பவரும் ரூ.30 ஆயிரம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

மேலும் ஹோம் கிரெடிட் பைனான்ஸ் என்ற பெயரில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறியதை நம்பி நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த வாணி என்பவர் ரூ.86 ஆயிரம் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். கோரிமேடு பகுதியை சேர்ந்த ரவிகுமார் எஸ்பிஐ வங்கி போன்ற குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை வழங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது கணக்கிலிருந்து ரூ.49 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதேபோல் குண்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் நாதன் என்பவரும் ரூ.45 ஆயிரத்தை இழந்துள்ளார். லாஸ்பேட் பகுதியை சேர்ந்த பிரக்யா என்பவர் இணையதளத்தில் கட்டுரை வெளியீடு தொடர்பாக ரூ.50 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி புதுவை வாலிபர் உட்பட 7 பேரிடம் ₹10.19 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: