தஞ்சாவூர், டிச.15: அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் கழிவறைகள் பூட்டிக்கிடப்பதுடன், போதிய குடிநீர் வசதியும் இல்லாததால் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் போக்குவரத்து வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அல்ட்ரா டீலக்ஸ், குளிர்சாதன வசதி பஸ், படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ் போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து தான் சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது. பஸ்களில் வெளியூர் பயணம் செய்வதற்காக வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு இல்லை. மக்கள் அமருவதற்கு வசதியாக இருக்கைகள் எதுவும் இல்லை. இதனால், மக்கள் பெரும்பாலும் நிற்க வேண்டிய நிலைதான் உள்ளது. மேலும் அவசர தேவைக்காக ஆண்கள், பெண்களுக்காக தனித்தனியாக கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த கழிவறைகள் எதுவும் பயன்பாட்டில் இல்லை. கழிவறைகள் பூட்டப்பட்டு உள்ளன.
இந்த கழிவறைகளுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் பஸ்களில் வெளியூர் செல்வதற்காக வரக்கூடிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதுவும் குறிப்பாக, பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இவர்கள் எல்லோரும் அவசரத்திற்காக பழைய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமின்றி குடிநீர் வசதியும் இல்லை. அடிப்படை வசதிகள் தான் போதுமான அளவு இல்லை என்றால் கட்டிடங்களும் மிகவும் மோசமாக உள்ளது. எனவே கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
