கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பாதிரியார்கள் சீர்வரிசையுடன் வருகை

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே மல்வார்பட்டியில் விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், பட்டாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் ஆலய பாதிரியார்கள் மற்றும் ஆலய மேலாளர் மற்றும் பலர் சீர்வரிசையுடன் வந்து கலந்து கொண்டனர். இதுகுறித்து மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் ஆலய நிர்வாகிகள் கூறுகையில், ‘‘300 ஆண்டுகளுக்கு முன்பு மாரம்பாடியில் தேவாலயம் கட்டுவதற்காக மல்வார்பட்டியில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இடம் கொடுத்ததால் ஆலயம் கட்டி வழிபாடு செய்து வருகிறோம்.

ஒவ்வொரு வருடமும் மாரம்பாடி ஆலய திருவிழாவின்போதும் மல்வார்பட்டி கிராம மக்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மல்வார்பட்டியில் ஒவ்வொரு ஊர் முக்கியஸ்தர் தேர்வு செய்யப்படும்போதும், மாரம்பாடி சர்ச்சில் இருந்து வந்து அவர்களுக்கு பதவியேற்பு செய்து பரிவட்டம் கட்டி வருவதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் மாரம்பாடியை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் கும்பாபிஷேகங்களிலும் எங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் நாங்கள் முறையாக சீர்வரிசையுடன் சென்று கலந்து கொள்வோம்’’ என்றார்.

The post கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பாதிரியார்கள் சீர்வரிசையுடன் வருகை appeared first on Dinakaran.

Related Stories: