கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கு: நாளை விசாரணைக்கு எடுக்க ஐகோர்ட் ஒப்புதல்

சென்னை: கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவை வந்தபோது, வாக்காளர் பட்டியலில் அவரது பெயர், அவரது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுதந்திர கண்ணன் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.

மனுவில், 2019 மக்களவை தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தன்னுடைய பெயரும், தனது மனைவி பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், தங்கள் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டிருப்பதால், நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதுவரை கோவை தொகுதியின் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள்.

The post கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கு: நாளை விசாரணைக்கு எடுக்க ஐகோர்ட் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: