புதுடெல்லி: கரூரில் 41 பேர் பலியானது தொடர்பான விசாரணையில் தவெகவின் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இதை தொடர்ந்து மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் கரூரில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஆதாரங்களை சேகரித்தனர். இதன் பிறகு வழக்கின் விசாரணைக்காக தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட விவகாரத்தை சிபிஐ எஸ்.பி சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கடந்த மூன்று நாளாக விசாரணை மேற்கொண்டனர். இதில் விசாரணைக்காக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரும், அதேபோன்று அரசு அதிகாரிகளான கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்பி ஜோஸ் தங்கய்யா, மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.
இதையடுத்து உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் கிடுக்குப்பிடியான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருந்தனர். இதையடுத்து மூன்றாம் நாளாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. புஸ்ஸி ஆனந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘‘ கரூரில் விஜயின் நிகழ்ச்சிக்கு தேதியை முன்கூட்டியே தேர்ந்தெடுத்தது மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை தேர்வு செய்ததற்கு மட்டுமே நான் பொறுப்பு.
மற்றபடி அனைத்து விவகாரங்களையும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணை பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல் குமார் ஆகியோர்தான் பார்த்துக் கொண்டனர் என்று கூறி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒதுங்கி கொண்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து, சென்னையில் காலதாமதமாக புறப்பட்டது, அதிக அளவிலான கூட்டம் சேர்ந்த பிறகும் விரைந்து செல்லாமல் இருந்தது, காவல்துறை கூறிய பிறகும் வாகனத்தை நிறுத்தாமல் முன்னேறிச் சென்றது போன்றவற்றிற்கு யார் காரணம் என்று ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரிடம் கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டனர்.
அதற்கு அவர்கள் இருவரும், மாற்றி மாற்றி கை காட்டிக் கொண்டதாக தெரிகிறது. அப்படி என்றால் அதனை எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் என்று இருவரிடமும் கேள்விகளை கொடுத்து பதிலாக வாங்கியுள்ளதாக தெரிகிறது. அப்போதும் ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்துள்ளனர். இவர்களில் யார் தவறு செய்தது என்பதை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், மூன்று நாட்கள் விசாரணை முடிந்த பிறகும் தேவைப்பட்டால் மீண்டும் கூப்பிடுவோம் என்று சிபிஐ அதிகாரிகள் 3 பேரையும் அனுப்பி வைத்தனர்.
மீண்டும் அழைப்போம் என்று கூறியதிலிருந்து அவர்களுக்குப் மீண்டும் சம்மன் வரும் என தெரிகிறது. மேலும், விசாரணை நிர்வாகிகளுடன் முடிந்து விடுமா அல்லது தவெக தலைவர் நடிகர் விஜய் வரை வருமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. டெல்லி என்ற மாயலோகத்தின் கதவை இப்போதுதான் தவெக எட்டிப் பார்த்துள்ளது.
இனி நடக்க வேண்டியது ஏராளம் என கிசுகிசுக்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். விசாரணைகு பின்னர் தவெக இணை பொதுச்செயாளர் நிர்மல் குமார் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘சிபிஐ அதிகாரிகள் தரப்பில் பல்வேறு முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அனைத்திற்கும் நாங்கள் வீடியோ ஆதாரங்களுடன் கூடிய விளக்கத்தை அளித்துள்ளோம். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில், துயர சம்பவம் நடக்காமல் எப்படி தடுத்து இருக்கலாம், எதனால் சம்பவம் நடந்தது ஆகியவை குறித்து பதிலளித்துள்ளோம்.
விசாரணைக்காக மீண்டும் சம்மன் அனுப்பி அழைப்போம் என்று சிபிஐ அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே வழக்கு தொடர்பாக எப்போது அவர்கள் அழைத்தாலும் நாங்கள் மீண்டும் ஆஜராகி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம். இதில் விஜய்க்கு சம்மன் அனுப்ப உள்ளதாக வெளியான செய்தியில் உண்மை கிடையாது’’ என்றார்.
