ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போதிய மதுபானங்கள் இருப்பில் வைக்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு

சென்னை: புத்தாண்டையொட்டி மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பொதுவாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மதுபான கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை 4,829 மதுபான கடைகள் முறைப்படி உரிமங்களுடன் இயங்கி வருகின்றன. அதன்படி, தினசரி விற்பனையில் இருந்து பண்டிகை நாட்களில் சற்று கணிசமாக விற்பனை செய்யப்படும். அந்தவகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்குகளை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டன.

அந்தவகையில் உரிமம் பெற்ற ஓட்டல்களில் உள்ள பார்களில் மது விற்பனை அதிகம் நடைபெறும் என்பதால் கூடுதலாக உயர் ரக பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபான வகைகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட விற்பனை இருக்கும் என்பதால் குறைந்த ரக மது பானங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர சுற்றுலா இடங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் இருப்பு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியாக விற்பனையாகும் மதுபான வகைகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: