வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில் உள்ள முருக கடவுள் ஆறு முகங்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். மேலும் சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் இராசகேசரி பெருவழிப் பாதையில் அமைந்துள்ள இக்கோயிலும் ஆண்டு தோறும் நடைபெறும் மாட்டுச்சந்தையும் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். புதுக்கோட்டை திருவாரூர் திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாடுகள் வாங்க வந்துள்ளனர். இந்த மாட்டுச்சந்தைக்கு வெள்ளகோவில், திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம், கோவை பகுதிகளில் இருந்து காங்கயம் இன மாடுகள், காளைகள், கிடேரிக்கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் நாட்டு மாடு, கன்றுக்குட்டி, காளைகளை வாங்கிச்செல்கிறார்கள். நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1000 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், ஒரத்தநாடு, கரூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து காளைகள், வளர்ப்பு மாடுகள், கிடேரிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த ஆண்டு மாட்டுச் சந்தையை காண பொது மக்கள் விவசாயிகள் பலரும் குடும்பமாக வந்து செல்கின்றனர்.
இங்கு 6 மாத இளங்கன்றுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடுகள் 35 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையும், சோடி காளைகள் 75 ஆயிரம் முதல் 1.30 லட்சம் வரையும், இனவிருத்தி காளைகள் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரையும் விற்பனைக்கு வந்துள்ளன. தற்போது காங்கயம் இனமாடுகளின் முக்கியத்துவம், காங்கயம் இனமாட்டின் பாலில் உள்ள மருத்துவ குணங்கள் என விழிப்புணர்வு மக்கள் மனதில் எழுந்தபின்னர் படிப்படியாக மாடு வளர்ப்போரின் பார்வை காங்கயம் இனமாடுகளின் மேல் விழத்தொடங்கியது. இதனால் தற்போது சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமானதுடன் விற்பனையும் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கண்ணபுரம் மாட்டுச்சந்தையையொட்டி காளைகள், மாடுகளுக்கு தேவையான திருகாணிகள், சாட்டைகள், தும்புக்யிறுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் போடப்பட்டிருந்தன. திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடுகள் வாங்க வருவோரும் சரி, கோயிலில் மொட்டைபோட்டு நேர்த்திக்கடன் செலுத்த வருவோரும் சரி திரும்பிச்செல்லும்போது மறவாமல் சாட்டை வாங்கிச்செல்வது தொன்றுதொட்டு நடந்து வருவதாக கடைக்காரர்கள் ஆச்சரித்துடன் கூறினர்.
The post காங்கயம் அருகே தொன்று தொட்டு நடக்கும் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை: பாரம்பரியம் மாறாத பண்பாட்டு அதிசயம் appeared first on Dinakaran.