இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்

புதுச்சேரி : காதலர் தினத்தையொட்டி இன்று புதுவை ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் காதலர் தினம் இன்று (பிப்.14ம்தேதி) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான தயாரிப்புகளில் காதலர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். தங்களது ஜோடிக்கு ரோஜாப்பூ கொடுப்பது, வாழ்த்து அட்டை எழுதுவது, பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வது, செல்போனில் குறுந்தகவல் அனுப்பி மகிழ்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் ரோஜாப்பூக்களின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதற்காக பெரிய மார்க்கெட் மற்றும் பூக்கடைகளில் விற்பனைக்காக வெளிமாநிலங்களில் இருந்து வண்ண, வண்ண கலர்களில் ரோஜாப்பூக்கள் குவிந்துள்ளன. இவற்றின் விலை கடந்த ஆண்டைவிட அதிகமாக உள்ளது.அதாவது ஒருகட்டு ரோஜாப்பூ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், ஒரு பூ என்று தனியாக வாங்கினால் ரூ.30 முதல் ரூ.40 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கப்படுகிறது.

இவற்றின் விலை மேலும் அதிகமாகும் என்பதால் முன்னதாகவே காதலர்கள் தங்களுக்கு தேவையான ரோஜாப்பூக்களை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.இதனிடையே இன்று புதுச்சேரியில் பாரதி பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு வரும் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க தந்தை பெரியார் தி.க.வினர் முடிவு செய்துள்ளனர். அதேவேளையில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

காதலர் தின கொண்டாட்டத்துக்கு கொண்டாடும் விதமாக ஒரு சில ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் 10 சதவீதம் குறைப்பு போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. காதலர்களை கவரும் வகையில் நட்சத்திர ஓட்டல்கள், ரெஸ்ட்டோ பார்களில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் போன்ற சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள் appeared first on Dinakaran.

Related Stories: