பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை வரும் 22ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பொது சேவை மையங்கள் செயல்படுவதால் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர்,வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 22ம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம். நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: