The post தமிழகத்தில் 20ம்தேதி வரை மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 20ம் தேதிவரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – மேற்குவங்காள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் செப்.20ம் தேதிவரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 20ம்தேதி வரை மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.