இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்: சென்னை முதன்மை அஞ்சலக தலைவர் முரளி வேண்டுகோள்

சென்னை:அஞ்சல் துறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக சென்னை பொது அஞ்சலக முதன்மை அஞ்சலகத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கை திறப்பதன் மூலம், அனைத்து மத்திய /மாநில அரசுகளின் மானியங்களை நேரடிப் பலன் பரிமாற்றங்களின் கீழ் பெறலாம். 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரி விவசாய திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்றவற்றின் பயனாளிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கை தொடங்கலாம் மற்றும் எந்த அஞ்சலகங்களிலும் அவற்றின் பலன்களைப் பெறலாம். பல்வேறு அரசாங்க திட்டங்களின் பயனாளிகளுக்கு சேவை செய்வதே வங்கியின் முக்கிய நோக்கம்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் சேவையை வழங்கி வருகிறது. மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஜீவன் பிரமானின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர்கள் மூலம் இந்த சேவைகளைப் பெறலாம். தபால்காரர்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆதார் சேவைகள் அளிக்கும் வசதியைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வது, மொபைல் எண்களை புதுப்பிப்பது/சேர்ப்பது போன்ற சேவைகளை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே வழங்க முடியும்.

குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு சேவை செய்வதற்காக, 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அத்தொகையை தபால்காரர்கள் மூலம் வீட்டு வாசலிலேயே வழங்கப்படுகிறது. எனவே இதுபோன்ற பல பயன்களை வழங்கும் இந்தியா போஸ்ட் வங்கியின் சேவைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்: சென்னை முதன்மை அஞ்சலக தலைவர் முரளி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: