புழல்: புழல் மத்திய சிறையில் நேற்றிரவு துணை ஜெயிலர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எங்களை ஏன் இங்கு மாற்றினீர்கள் எனக் கேட்டு நைஜீரிய நாட்டை சேர்ந்த கைதி சரமாரி தாக்குதலில் ஈடுபட்டார். இதில் துணை ஜெயிலர் படுகாயமடைந்தார். இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் சுமார் 900க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே செல்போன் மற்றும் கஞ்சா நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது தகவல் கிடைக்கும். இதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி செல்போன், சார்ஜர், பேட்டரி மற்றும் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்வது வழக்கம்.
இதுதொடர்பாக புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டும் வருகிறது. எனினும், புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே செல்போன் மற்றும் கஞ்சா நடமாட்டத்தை சிறைத்துறை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டு கைதியிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டார். இதை கண்டித்து மற்றொரு வெளிநாட்டு கைதி, கடந்த 2 நாட்களுக்கு முன் சிறைக் காவலரை சரமாரி தாக்கியுள்ளார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவு பகுதியில் நேற்றிரவு துணை ஜெயிலர் சாந்தகுமார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு அறைக்குள் இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இசப்பா அகஸ்டின் கிறித்தி (41) என்ற வெளிநாட்டு கைதி, ‘எங்களை ஏன் இந்த அறைக்கு மாற்றினீர்கள்?’ எனக் கேட்டு சாந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமான வெளிநாட்டு கைதி இசப்பா அகஸ்டின் கிறித்தி, அங்கிருந்த சாப்பாடு தட்டு எடுத்து துணை ஜெயிலர் சாந்தகுமாரை சரமாரி தாக்கியுள்ளார்.
அதை துணை ஜெயிலர் சாந்தகுமார் கைகளால் தடுத்ததில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் சிறைக் காவலர்கள் விரைந்து வந்து, வெளிநாட்டு கைதியிடம் துணை ஜெயிலர் சாந்தகுமாரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் காவலர்கள் மற்றும் கைதிகளுக்கும் இடையே அடிக்கடி வன்முறை தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டாலும், அவர்களின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் புழல் மத்திய சிறையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரலில் மத்திய சிறை இருந்தபோது கைதிகள் கலவரம் நடந்ததை போல் இங்கு வன்முறை நடைபெறுவதை தடுக்கவும், காவலர்கள் மற்றும் கைதிகளுக்கு இடையே ஏற்படும் அடிதடி தகராறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post புழல் மத்திய சிறையில் துணை ஜெயிலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல் appeared first on Dinakaran.
