கும்மிடிப்பூண்டி, ஆக.8: கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலுர் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லியர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் (38), சுப்பம்மா (70), மல்லிகா (60), ரமணி (52) ஆகியோர், நேமலூர் இருந்து பாதிரிவேடு பஜார் பகுதிக்கு செல்வதற்காக நேற்று மாலை ஷேர் ஆட்டோவில் பயணித்தனர். அப்போது, ஆட்டோ நிலைதடுமாறி அருகே இருந்த பனைமரத்தில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார்.
இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த முருகேசன், சுப்பம்மா, ரமணி, மல்லிகா ஆகியோரை மீட்டு, சிகிச்சைக்காக மாதர்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது முருகேசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் சுப்பம்மா காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு காவல் நிலைய போலீசார், முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாதிரிவேடு காவல் நிலையத்தில் முருகேசனின், மனைவி ஈஸ்வரி புகார் மனு அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட பதிவு எண் இல்லாத வாகனங்களும் ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனங்களும், ஆவணங்களே இல்லாத வாகனங்களும் சுற்றித் திரிவதாக காவல்துறைக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது இதுபோன்ற அவல நிலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.
The post நேமலூர் சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி; 4 பேர் காயம் appeared first on Dinakaran.
