வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது தண்டராம்பட்டு அருகே

தண்டராம்பட்டு, ஜூலை 14: தண்டராம்பட்டு அருகே வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் ஊராட்சியை சேர்ந்த வெங்கட்ராமன்(56). இவரது மனைவி சுமித்ரா(50). இவர்களது மகன் சஞ்சய்(25). பெங்களூருவில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சஞ்சய் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சே.கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், சஞ்சய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாணாபுரம் போலீஸ் எஸ்ஐ குமரேசன் மற்றும் போலீசார் சஞ்சய் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முன்னதாக, தற்கொலை செய்து கொண்ட சஞ்சய்யின் சட்டை பாக்கெட்டை சோதனை செய்தபோது, அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், எனது சாவுக்கு கச்சராப்பட்டு கிராமத்தை சேர்ந்த கலைராஜா(45), சேர்ப்பாப்பட்டு கிராமத்தை சேர்ந்த எட்டியான்(62) ஆகிய இருவரும் தான் காரணம் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சஞ்சய்யை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக கலைராஜா, எட்டியான் ஆகிய 2 பேரையும் வாணாபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது தண்டராம்பட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: