வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை: ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால், குற்றாலத்தில் சீசன் களைகட்டியது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் பேரிகார்டுகளை வைத்து ஓரமாக விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் அனுமதித்து வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலம் மெயின் அருவியிலும் குளிக்க தடை விதித்துள்ளனர்.

அதேபோல், பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை: ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: