ரூ.14 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயம் விவசாயிகளுக்கு தடையின்றி பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு: கூட்டுறவுத்துறை தகவல்

சென்னை: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ரூ.14 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 2006-07ம் ஆண்டு முதல் பயிர்க்கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீத வட்டி இழப்பை தமிழ்நாடு அரசு வட்டி மானியமாக கூட்டுறவுகளுக்கு அளித்து வருகின்றது.

அதேபோல, கடந்த 2009ம் ஆண்டு முதல் உரிய காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டிச் சுமையினை அரசே ஏற்றுக்கொள்ளும் என ஆணையிடப்பட்டு, இன்றளவும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உரிய தவணை தேதிக்குள் பயிர்க் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகள் சார்பாக 7 சதவீத வட்டியினை அரசே கூட்டுறவுச் சங்கங்களுக்கு செலுத்தி வருகிறது. 2022-23ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 17.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13342.30 கோடி பயிர்க் கடன் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் புதிய உறுப்பினர்களாக 2.35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,655.60 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, தற்போதைய நிதியாண்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ரூ.14 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 15ம் தேதி வரை 1,37,052 விவசாயிகளுக்கு ரூ.1,102.17 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 94,749 விவசாயிகளுக்கு ரூ.717.29 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போதைய நிகழாண்டில், கடந்த 15ம் தேதி வரை 14,641 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, சாகுபடி பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

The post ரூ.14 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயம் விவசாயிகளுக்கு தடையின்றி பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு: கூட்டுறவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: