சாதனை படைத்த கலைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: தமிழகத்தின் கலைப் புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது வரை கலைவளர் மணி விருதும், 36 முதல் 50 வயது வரை கலைச் சுடர்மணி விருதும், 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருதும், 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதும் என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக்கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று ஆதார் அட்டை நகல் மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் – 631502 என்ற முகவரிக்கு வருகின்ற 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் 044 – 27269148 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post சாதனை படைத்த கலைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: