தோழி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோகம் நீண்டநேரம் நடனமாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலி

அண்ணாநகர்: சிட்லப்பாக்கம் சபரி தெருவை சேர்ந்தவர் மணிபிரசாந்த் (21). இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பணியாற்றிய இளம்பெண் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மணிபிரசாந்த், நண்பர்களுடன் சேர்ந்து வெகுநேரமாக நடனமாடியுள்ளார். அப்போது, திடீரென மணி பிரசாந்திற்கு வாந்தி மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர் சிறிதுநேரத்தில் துடிதுடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து, அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மணி பிரசாத் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தகவல் அறிந்த நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மணிபிரசாந்த் சடலத்தை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபிரசாந்த் சாப்பிட்ட உணவு செரிக்காமல் மூச்சு திணறி இறந்தாரா? அல்லது மதுபோதையில் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, மணிபிரசாந்த் இறப்பிற்கான உண்மை நிலை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

The post தோழி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோகம் நீண்டநேரம் நடனமாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலி appeared first on Dinakaran.

Related Stories: