அம்பேத்கர் 133வது பிறந்தநாள் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: அம்பேத்கர் 133வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் 133வது பிறந்த நாளான சமத்துவ நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், செஞ்சி மஸ்தான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தாயகம் கவி எம்எல்ஏ, ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மேயர் பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல்: அம்பேத்கர் 133வது பிறந்த நாளான சமத்துவ நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து பிற்போக்குத்தனங்களில் மூழ்கியிருந்த இந்த சமூகத்தில் அறிவொளி ஏற்றிட்ட புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் இலட்சியங்களை நெஞ்சிலேந்தி, சமத்துவ நாள் உறுதிமொழியேற்று போற்றினேன். சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல், மானுடத்தின் பொருள்’’ என கூறியுள்ளார்.

The post அம்பேத்கர் 133வது பிறந்தநாள் முதல்வர் ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: