சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி சொத்தை அபகரிக்க நயினார் நாகேந்திரன் போலி பத்திரப்பதிவு? ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார்

சென்னை: பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அவருடைய மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்ததாக தலைமை செயலாளரிடம் அறப்போர் இயக்கம் புகார் செய்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தில் சுமார் 1.8 ஏக்கர் நிலத்தை அபகரிக்க மோசடி பத்திரபதிவுகளில் ஈடுபடுகின்றார் இளையராஜா என்னும் நபர். 10 நபர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை தங்களுடைய நிலம் என்றும் இந்த நிலத்தை விற்கவும், விற்கும் பணத்தை பெற்று கொள்ளவும் பொது அதிகார பத்திரத்தை இளையராஜா மற்றும் அனிஷ் என்பவர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்கின்றனர்.

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள இந்த நிலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திருநெல்வேலி முரப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 21ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி பொது அதிகார பத்திர பதிவு செய்கிறார்கள். இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் அனந்தராமன் ஆவார். மேலும் அதே ஜூலை மாதம் இந்த கோயில் நிலத்தை குடும்ப செலவுக்காக இளையராஜா மற்றும் அனிஷ் சேர்ந்து அடகு வைப்பதாக பழனியில் உள்ள வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2021ம் ஆண்டு ஜூலை 19ம் தேதியன்று பதிவு செய்கிறார்கள். இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பிரஷாந்த் சந்தான கருப்பன் ஆவார்.

இதை இளையராஜா குடும்ப செலவுக்காக அவருடைய மனைவி கவிதா என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு அடகு வைப்பதாக பத்திரப்பதிவு செய்கிறார். அனிஷ் அவருடைய தந்தை பிரகாஷ் என்பவரிடம் அடகு வைப்பதாக பதிவு செய்கின்றனர். அதாவது கோயில் நிலத்திற்கு அடுத்தடுத்து பல பத்திரப்பதிவு உருவாக்குவதற்காக இதை செய்கிறார்கள். இதெல்லாம் மோசடி பத்திரபதிவு என்று மாவட்ட தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு பதிவுத்துறை ஐஜி கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி சுற்றறிக்கை அனுப்புகிறார். அதில் நிலத்தை பதிவு செய்யும் முன்னர் முதலாவதாக இந்த நிலம் அரசு நிலமா, நீதிமன்ற தடை உள்ளதா அல்லது வக்ப் போர்டு நிலமா அல்லது கோயில் நிலமா என்று பார்க்க வேண்டும். ஆனால் அது சரிபார்க்கப்படவில்லை.

இரண்டாவது பத்திரப்பதிவு சட்டத்தின் விதி 28 மீறப்பட்டு உள்ளது என்று குறிப்பிடுகிறார். இந்த விதிமீறலை வைத்து தான் பத்திரப்பதிவு துறையில் பல மோசடிகள் செய்யப்படுகிறது. விதி 28ன் படி ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட நிலத்தை வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது. மேலும் ஒருவருடைய நிலம் இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தால் அதனை ஏதேனும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் இந்த இரண்டு நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே முக்கிய விதி. ஆனால் மேலே பதியப்பட்ட இரண்டு நிலங்களிலும் அப்பட்டமாக விதிமீறல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை மோசடியாக பதிவு செய்தபின் இளையராஜா மேலும் ஒரு மோசடி பத்திர பதிவை பெரிய அளவில் செய்துள்ளார்.

அதாவது சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிய திட்டமிடுகிறார்கள். விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலம் பல சர்ச்சைக்குள் சிக்கி உள்ளது. பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோருகின்றனர். 2006ம் ஆண்டு சரஸ்வதி என்பவருடைய பெயரில் பட்டா உள்ளது. அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்பவருக்கு விற்றுள்ளார்.

பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோர் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் 2008ம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகபிரிவினை பத்திரத்தை பதிவு செய்கிறார்கள். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நடந்து கொண்டு உள்ளது. பதிவுத்துறை ஐஜி 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சுற்றறிக்கையை வெளியிட்ட அடுத்த மாதமே, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், பாஜ கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை பதிவு செய்கிறார்கள்.

வேறொருவர் அதாவது வசந்தா மற்றும் சுந்தரமகாலிங்கம் பெயரில் உள்ள நிலத்தை ஒப்பந்தம் போட இளையராஜா வந்த பொழுதே அவர் பெயர் பட்டாவில் இல்லை மற்றும் முந்தைய பதிரப்பதிவுகளில் அவர் பெயர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். மேலும் பிரிவு 28ஐ மீறி சென்னை நிலத்தை திருநெல்வேலியில் பதிய முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் சார்பதிவாளர் சரவணமாரியப்பன் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் பத்திரப்பதிவு செய்கிறார். சென்னை மெட்ரோ ரயில் இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தில் நயினார் பாலாஜி ரூ.46 கோடிக்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்றும் முன்பணமாக ரூ.2.5 கோடி கொடுத்துள்ளதாகவும் அதில் ரூ.50 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி பதிவு செய்த இளையராஜா தான் இந்த நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜென்ட் என்றும் இந்த நிலம் குலாப்தாஸ் நாராயண் தாஸ் ஆகியவர்களின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என கூறி இந்த 1.3 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பாஜவை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து 2022ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த முறைகேட்டில் அதிரடியாக களமிறங்கிய வருவாய் துறை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தின் பட்டாவை சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இருந்து, 1946ம் ஆண்டு மகாராஷ்டிராவிலும், 1944ம் ஆண்டு சென்னையிலும் இறந்த குலாப்தாஸ்கு நாராயணதாஸ் அவரின் பெயருக்கு ஆகஸ்ட் 2022ம் ஆண்டு பட்டா மற்றம் செய்து உள்ளனர்.

அரசு இது போன்ற நிலங்களின் உண்மை தன்மையை கண்டுபிடித்து வாரிசு இல்லாத பட்சத்தில் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கி அதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு, இந்த மோசடியில் ஈடுபட்ட இளையராஜா, நயினார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீதும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளது. நயினார் பாலாஜி ரூ.46 கோடிக்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்றும் முன்பணமாக ரூ.2.5 கோடி கொடுத்துள்ளதாகவும் அதில் ரூ.50 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளளார்.

The post சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி சொத்தை அபகரிக்க நயினார் நாகேந்திரன் போலி பத்திரப்பதிவு? ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: