பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை

கரூர், டிச.5: கரூர் மாவட்டம், பாகநத்தம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பன்னீர்செல்வம் அறிவியல் பாடத்தை மாணவர்களின் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாகவும், கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி நடத்தியதாக மாவட்ட கல்வி அலுவலர் கடந்த சில தினங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த முற்றுகை போராட்டம் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. பொது மக்களின் போராட்டம் குறித்து வட்டார கல்வி அலுவலர் ரமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் ரமணி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் சார்பாக ஆசிரியர் மீது முன்பகை காரணமாக தலைமையாசிரியர் தனலட்சுமி மாணவர்களிடம் தவறான முறையில் கையெழுத்துப் பெற்று புகார் அளித்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

 எனவே ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்த வேண்டும் என்றும், தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி கோரிக்கை மனுவினை எழுத்துப்பூர்வமாக கொடுத்தனர். கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டார கல்வி அலுவலர் ரமணி புகார் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதாகவும், அவர்கள் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொள்ளும்போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களை வெள்ளியணை காவல் நிலைய போலீசார் அனைவரையும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: