மதுரை, ஏப்.13: மதுரை மாநகராட்சி குடிநீர் விநியோக பிரதான குழாய்களில் பழுதுபார்க்கும் பணி நடப்பதால் ஏப்.15ம் தேதி ஒருநாள் மட்டும் குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் வைகை குடிநீர் திட்டப்பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் இரண்டாம் வைகை குடிநீர் திட்டத்தின் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் அருள்தாஸ்புரம் பாலம் அருகே, வைகை ஆற்றின் வடகரையில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து குடிநீர் வீணாவது தடுக்கப்படும். சொக்கிகுளம் பகுதியில் மேம்பாலப் பணிகளுக்கு இடையூறாக உள்ள குழாய்களை மாற்றி, வேறு குழாய்கள் பதிக்கப்படுகிறது. இப்பணிகளுக்காக ஏப்.15ல் ஒருநாள் மட்டும் குறிப்பிட்ட சில இடங்களில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.