மார்த்தாண்டம் அருகே வீட்டில் விஷம் குடித்து தம்பதி தற்கொலை

மார்த்தாண்டம், ஏப்.8:  மார்த்தாண்டம்  அருகே கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து  கொண்டனர். அவர்கள் மலையாளத்தில் எழுதிய கடிதம்  ேபாலீசாரிடம் சிக்கியது.குமரி மாவட்டம் மார்த்தாண்டம்  அருகே பாகோடு, முலயம்விளாகம் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன்(75). இவரது  மனைவி ரோசம்மாள்(68). இவர்களுக்கு சிங்(40), ஜெகதீஷ்(37) என்ற இரு மகன்கள்  உள்ளனர். இதில் மூத்த மகன் சிங் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.  இளைய மகன் ஜெகதீஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில்  பணிபுரிந்து வருகிறார்.   லெட்சுமணன், ரோசம்மாள் இருவருக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்துள்ளது. மேலும் இவர்களுக்கு கண்  பார்வை குறைபாடும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2  நாட்களுக்கு முன் ஜெகதீஷ் ஆற்றூரில் உள்ள மனைவி வீட்டிற்கு சென்று  தங்கியுள்ளார். நேற்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில்  லெட்சுமணன், ரோசம்மாள் இருவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். இதனை  கண்ட ஜெகதீஸ் கதறி துடித்தார். சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி  வந்தனர்.

 பின்னர் இது குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து  தற்கொலைக்கான காரணம் அறிய வேண்டி ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளனரா? என்று  வீட்டில்  தேடுதல் நடத்தினர். அப்போது போலீசார் கையில் லெட்சுமணன்  தம்பதியர் மலையாளத்தில் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில், எங்களது  மகன்கள் நல்ல நிலையில் உள்ளனர். எங்களுக்குரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட  பிரச்னைகள் உள்ளன. நாங்கள் யாருக்கும் தொல்லை கொடுக்க விரும்பவில்லை. எனவே  நாங்கள் தற்கொலை செய்ய முடிவு எடுத்தோம் என கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

  இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கடிதத்தில்  கூறப்பட்டுள்ளது உண்மை தானா? அல்லது வேறு ஏதாவது பிரச்னையா? என்ற கோணத்தில்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: