ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 9 பெண்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பில்வாரா மற்றும் பன்ஸ்வாரா மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி முதல் 10ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 9 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவுகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட போது நடந்த இந்த உயிரிழப்புக்கள் சுகாதாரத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பன்ஸ்வாராவில், ஜூலை 7 முதல் 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மருந்துகளால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதற்கான உடனடி அறிகுறிகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
