புதுச்சேரி பள்ளி விழாவில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அதிமுக எம்எல்ஏ மோதல்

புதுச்சேரி: பள்ளி விழாவில் அதிமுக எம்எல்ஏவும், தவெக அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் நேரடியாக மோதிக்கொண்டனர். புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல்3இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கம் வழங்கும் விழா நேற்று நடந்தது. புதுச்சேரி தற்காலிக சபாநாயகரும், அதிமுக மாநில செயலாளருமான அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னதாக தலைமையுரையாற்றிணய அன்பழகன், அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெக அரசு, அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதை மறைமுகமாக கண்டித்தும், அது போல செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். மேலும் 5 முறை எம்எல்ஏவாக இருக்கிறேன். பதவிக்காக மற்றொரு கட்சிக்கு செல்ல மாட்டேன். உயிருள்ளவரை அதிமுகவில்தான் இருப்பேன்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அந்த கட்சியின் மீது விசுவாசம் வைத்துள்ளார்கள். அப்படி வேறு கட்சியில் இருப்பவர்களை மனம் மாற்றாமல் நீங்கள்( புஸ்ஸி ஆனந்த்) இருக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன், என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், அப்படி வருபவர்கள் எந்த இடம் நல்ல இடம் என்பதை அறிந்து அவர்கள் வந்துள்ளனர். நீங்கள் சரியாக இருந்தால் அவர்கள் ஏன் இங்கு வரப்போகிறார்கள். ஊழல் இல்லாத இடத்தை நோக்கி வருகிறார்கள். அதனால் வரவேற்கிறோம் என்றார். பள்ளி விழாவில் அரசியல் சார்ந்த பேச்சுகள் இருவரும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

* வரேன் தம்பி… ஆளை விடுங்க..
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் நிருபர்கள் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முயன்றனர்.அப்போது பள்ளிக்கூடம், இங்கு பேட்டி வேண்டாம், வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என நழுவி சென்றார். நீர்வளத்துறை அமைச்சரான நீங்கள் இந்த ஒரு கேள்விக்கு பதிலளியுங்கள் என விடாமல் துரத்தி சென்ற நிருபர்களிடம், மேகதாது விவகாரம் தொடர்பாக அறிக்கை கொடுத்துள்ளோம் என்றார். தொடர்ந்து கேள்வி எழுப்பியவுடன் வரேன் தம்பி, வரேன் என்று நழுவிவிட்டார்.

Related Stories: