வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

 

பெரம்பலூர், ஜூன் 15: வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. சிலப்பதிகார கண்ணகியின் சினம் தனித்த ஸ்தலமாகக கருதப்படும் இக்கோவில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத் ஸ்தலமாகவும் திகழ்கிறது. ஆதி சங்கரர் வழிபாடு செய்து பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கி வரும் இக்கோவிலில் வழக்கமாக வாரத்தின் திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களே நடைதிறப்பது வழக்கம்.

இவை தவிர பௌர்ணமி, அமாவாசை நாட்களிலும், நவராத்திரி பண்டிகை நாட்களிலும், ஆங்கில, தமிழ்ப்புத்தாண்டு தினங்களிலும், கோவில் திருவிழா நாட்களிலும் திறக்கப்படுவது வழக்கம். ஏவல், பில்லி சூனியம், கட்டுகளை அகற்றும் சக்தி வாய்ந்த அம்மனாக கருதப்படும் இந்த கோவிலில் நேற்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது.

இதனையொட்டி சிறுவாச்சூர் மற்றும் விளாமுத்தூர், செல்லியம் பாளையம், பெரம்பலூர், புது நடுவலூர், அரணாரை, நெடுவாசல், கல்பாடி, அய்யலூர், மருதடி நாரண மங்கலம், சத்திரமனை வேலூர், தம்பிரான்பட்டி, கீழக் கணவாய், ரெங்கநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குலதெய்வ வழிபாட்டாளர்கள், அம்மன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் சென்றனர்.

 

Related Stories: