அரவக்குறிச்சி, மார்ச் 5: அரவக்குறிச்சி பகுதியில் தங்கள் உரிமம் பெற்று தனியார் பயன்படுத்தி வந்த 17 துப்பாக்கிகள் சட்டமன்றத் தேர்தலை விதிமுறைகள்படி, காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் அரவக்குறிச்சி காவல் நியைத்தில் ஒப்படைக்கப்பட்டது.தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்றபொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பறக்கும்படை, நிலையான சோதனைக் குழு அமைக்கப்பட்டு பணம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் கொண்டு செல்கின்றனரா என வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் அனுமதிபெற்று துப்பாக்கி வைத்திருப்போர் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி துப்பாக்கியை அந்தந்த காவல் நியைத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் அவரவர் துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.