சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ததையும், அதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் தலைவர்களை கைது செய்ததையும் வன்மையாக கண்டிக்கிறேன். பினராயி மாணவர் பருவத்தில் இருந்தே மார்க்சிய சிந்தனையில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறந்த முதல்வராக செயல்பட்டவர்.
அமலாக்கத் துறை அவரை குறி வைத்து சோதனை என்ற பெயரில் கைது செய்வது மிரட்டுகின்ற வேலை. ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை தினமும் ஏற்றி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேகதாது அணை கட்டுவதை கண்டித்து ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் மதிமுக தலைமையில் நடைபெறுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விவசாயத்தை அழித்து வரும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க ஒன்றிய அரசு காட்டுப்பன்றியை விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
கேரளா மற்றும் தமிழக எல்லையில் உள்ள செண்பகவல்லி அணையை கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களை நீதிபதிகள் ஜாமீனில் விடுவிக்க கூடாது. அவர்களுக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறை தண்டனை விதிக்க வேண்டும்.தவெக வெற்றி பெற்றதால் திராவிட இயக்கம் மீண்டு வராது என்று நினைத்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
