பிளஸ் 2 மாணவியை வீடு புகுந்து தூக்கி சென்று தாலி கட்டிய தொழிலாளி: உடந்தையாக இருந்த அக்கா, தம்பி

 

கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 மாணவியை வீடு புகுந்து தூக்கி சென்று தாலி கட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக அக்கா, தம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த 17வயதான பிளஸ் 2 மாணவி தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க தயாராகி வந்தார்.

இந்நிலையில் கடந்த 16ம்தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். தகவல் அறிந்த சின்னசேலம் அருகில் உள்ள கருங்குழி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முனீஸ்வரன் (40) மாணவி வீட்டிற்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி யாராவது காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். அதனை பொருட்படுத்தாமல் முனீஸ்வரன் வலுக்கட்டாயமாக அவரை தனது வீட்டிற்கு தூக்கி சென்றுள்ளார்.

இதனையடுத்து முனீஸ்வரனின் அக்கா மீனாட்சி, தம்பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாணவிக்கு முனீஸ்வரன் தாலி கடடியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி கதறி அழுதுள்ளார். தகவல் அறிந்ததும் மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முனீஸ்வரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக அவரது அக்கா மீனாட்சி, தம்பி கிருஷ்ணமூர்த்தி மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: