அடுக்குமாடி குடியிருப்பில் கயிறு அறுந்து விழுந்து பெயிண்டர் சாவு

 

கோவை, மே 14: அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணியில் போது, கயிறு அறுந்து விழுந்து பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சுந்தராபுரம், குறிச்சியைச் சேர்ந்தவர் ராமன் (42). பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் (12ம் தேதி) ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக அவர் கயிறு கட்டி, அதில் அமர்ந்து உயரமான கட்டிடத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் கட்டியிருந்த கயிறு திடீரென எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது.
அதில், ராமன் நிலைதடுமாறிய மேலே இருந்து கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ராமனை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் பலத்த காயமடைந்த ராமனை பரிசோதித்து பார்த்தனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: