சென்னை: வார இறுதி நாட்கள், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களான நாளை மற்றும் ஏப். 18, 19 தேதிகளில் கிளாம்பாக்கம், கோயம்பேடு , மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை 295 பேருந்துகளும், ஏப்ரல் 18ல் 310 பேருந்துகளும், கோயம்பேட்டியில் இருந்து நாளை மற்றும் 18ம் தேதி தலா 55 பேருந்துகள், மாதவரத்திலிருந்து தலா 20 பேருந்துகள் இயக்கபடவுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை மற்றும் 18/04/2026 (சனிக்கிழமை),19/04/2026 (ஞாயிறுக்கிழமை), வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 295 பேருந்துகளும், 18/04/2026 (சனிக்கிழமை) 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பேருந்துகளும் 18/04/2026 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
