மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக மக்கள் சாலை மறியல்

 

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் திடீரென மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சில நாட்களாகவே குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார். பேருந்துகள் இல்லாமல் நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

மதுரையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்குச் செல்வதற்காக நேற்றிரவு முதலே ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் குவிந்தனர். சிறப்புப் பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல மணி நேரம் காத்திருந்தும் குறிப்பிட்ட ஊர்களுக்குச் செல்ல ஒரு பேருந்து கூட வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விடிய விடிய பேருந்து நிலையத்திலேயே தங்கும் அவலநிலை ஏற்பட்டது. போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று காலை பேருந்து நிலையத்தின் நுழைவாயில் மற்றும் வெளிச்சாலையில் திரண்டு திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இதுகுறித்து பயணி ஒருவர் பேசுகையில், நேற்று இரவு 9 மணிக்கு வந்தோம். விடியற்காலை 6 மணி ஆகியும் கோவைக்கு ஒரு பேருந்து கூட வரவில்லை. தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட மூன்று மடங்கு கட்டணம் கேட்கிறார்கள். அரசுப் பேருந்துகளை நம்பி வந்த எங்களை விடிய விடிய தவிக்கவிட்டுவிட்டார்கள் என்று வேதனை தெரிவித்தார்.

மறியல் போராட்டம் காரணமாக மாட்டுத்தாவணி சந்திப்பில் பெரும் பதற்றம் நிலவியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பயணிகளின் கோரிக்கை நியாயமானது என்பதை உணர்ந்த போலீசார், உடனடியாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அவசர அவசரமாக மாற்றுப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

 

 

 

 

 

 

 

Related Stories: