வெற்றி பெற்றாதான் தெரு தெருவா விஜய் வருவாராம்… சொல்கிறார் ஆதவ்

தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: விரைவில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படும். எடப்பாடி தொகுதியில் சில துரோகி, கருப்பாடுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி விட்டார். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். தனிமனிதரை தாக்கி பிரசாரம் நடத்தி வருகிறார். மக்கள் தேவைகளை பேசவில்லை. ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் வடநாட்டு அரசியலை இங்கு நடத்த பார்க்கிறார்.

தஞ்சாவூரில் கோதுமை விளையாது, நெல்மணி தான் விளையும். அதேபோல வடநாட்டு அரசியல் தமிழ்நாட்டில் ஈடுபடாது. அவர்களுக்கு நாம் பேசும் மொழியும் தெரியாது, நம் கலாசாரமும் தெரியாது. திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் விஜய் பிரசாரம் மேற்கொள்வார். எம்எல்ஏவானதும் ஒவ்வொரு தெருவாக நன்றி கூற வருவார். அதுவரை தெருத்தெருவாக சென்று பிரசாரம் செய்வது சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது. ஜனநாயகன் திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானதற்கு பாஜவிற்கு தொடர்பு இருக்கிறது. இதை நான் மீண்டும் பதிவு செய்கிறேன். விஜய்க்கு மன அழுத்தத்தை கொடுப்பதற்காகவே படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* எம்ஜிஆரின் இரட்டை இலை இப்ப நம்பியார் கிட்ட இருக்கு: எடப்பாடியை கலாய்த்த மாணிக்கம்தாகூர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் மாணிக்கம்தாகூர் எம்பி பேசியதாவது: அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை எம்ஜிஆர் கொண்டு வந்தார். ஆனால் தற்போது அந்த சின்னம் நம்பியார் என்ற பழனிசாமியிடம் இருக்கிறது. கடந்த முறை தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடாத ராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் சென்றார். அங்கு திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனிடம் தோல்வியுற்றார். அந்த ராஜேந்திரபாலாஜி தற்போது மீண்டும் சிவகாசியில் போட்டியிடுகிறார். அவர் சிவகாசியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கதை சொல்வார். அவர் 10 ஆண்டு அமைச்சராக இருக்கும்போதே சிவகாசிக்கு எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கடுமையான தண்ணீர் பிரச்னை இருந்தது. இன்று சீரான முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதற்கான நடவடிக்கையை சிட்டிங் எம்எல்ஏ அசோகன் எடுத்தார். இவ்வாறு கூறினார்.

* கூட்டம் போட்டு கொல்லுற விஜய்: புளுகுமலை அண்ணாமலை; குட்டிக்கரண எடப்பாடி; எல்லாரையும் வெளுக்கும் கருணாஸ்
சிவகங்கை அருகே ஒக்கூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருணாஸ், நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பசும்பொன் முத்துராமலிங்க தேவருடன் ஒப்பிட்டு சொல்வதற்கு இந்தியாவிலேயே ஆள் இல்லை. குறிப்பாக அரைகுறை அண்ணாமலையுடன் ஒப்பிட்டு பேசுவது அபத்தமானது. அவருடைய அறிவு அவ்வளவு தான். ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து பேசுவது, வயதில் பெரியவரான செல்லூர் ராஜூவிற்கு அழகில்லை. தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் ஜனநாயகன் படம் போல் திருட்டு வலைத்தளங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் பெரிதாக பேச எதுவுமில்லை. அண்ணாமலைக்கு புளுகு மலை என பெயர் வைக்கலாம்.

ஒரு நடிகர் மட்டுமில்லை. எந்த ஒரு மனிதரும் ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வரலாம். ஆனால் ஒரு கூட்டம் போடுவதற்கே 41 பேர் கொல்லப்பட்டனர். இன்னும் எத்தனை கூட்டம் போட்டு எவ்வளவு பேரை சாகடிக்க போகிறார்கள் என தெரியவில்லை. அதுதான் இங்கு பிரச்னை. எதுவுமே செய்ய மாட்டோம். ரூமில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வோம். ஸ்ட்ரைட்டா முதல்வராக வருவோம் என நினைக்கிறது ரொம்ப சீப்பாக இருக்கு. மக்களிடம் வாக்கு கேட்டு முதலமைச்சர் ஆனாரா எடப்பாடி பழனிசாமி?. ஜெயலலிதா முதல்வராக மக்கள் வாக்களித்தனர். அவர் மரணத்திற்கு பிறகு கும்பிட்டு விழுந்து குட்டிக்கரணம் அடித்து முதலமைச்சர் ஆனார். இது உலகறிந்த விசயம். தற்போது தான் முதல்வர் என வாக்கு கேட்கிறார். இதற்கு மக்கள் பனிஸ்மென்ட் கொடுப்பார்கள். திமுக 1967 மற்றும் 1971 என இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த அடிப்படை அரசியல் கூட தெரியாமல் பேசும் எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளரா?. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: