தலைநகர் சென்னைக்கு அருகில் காஞ்சி மாநகருக்குச் செல்லும் வழியில் உள்ள அழகிய கிராமம்தான் முடிச்சூர். ஆதியில் மணமுடிச்ச நல்லூர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ள இவ்வூரில் ஈசனும் இறைவியும் திருமணக் கோலத்தில் காட்சி தந்தமையால் அப்பெயர் வளங்கியது. நாளைடைவில் முடிச்சூர் என்று மருவி எடுத்துச் சொல்லும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை ஸ்ரீ அப்பாரியார் சுவாமிகள் என்ற மகான் ஓலைச் சுவடிகளிலிருந்து எடுத்து அச்சில் கோர்த்து இவ்வூரில் இருந்து முடித்தமையால் முடிச்சூர் என்ற பெயரைப் பெற்றது என்பர். ஊரினுள் நுழைந்த உடனேயே ஆலயத்தின் அருகே புண்ணிய புஷ்கரணியும் அருகில் நாகர் மேடையும் திவ்யஸ்வரூபிணியாகிய ஸ்ரீ வித்யாம்பிகையை தரிசிக்க வருக வருக என்று அழைப்பதைப் போன்று உள்ளது.
அரியும் சிவனும் ஒன்றே என்னும் கருத்தைச் சொல்லும் விதமாக சிவ – விஷ்ணு ஆலயமாகத் திகழும் இத்திருக்கோயிலில் அருள்மிகு பீமேஸ்வரர்-வித்யாம்பிகை ஆலய வளாகத்துக் குள்ளேயே ஸ்ரீ மந்நாராயணன் கோயிலில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத தாமோதரப் பெருமாள் சந்நதி அமைந்துள்ளது, மிகவும் விசேஷம். நல்லோர் பலர் நாவின் மூலம் நனி சிறந்த வார்த்தைகளின் படியும் முன்னோர்களின் சான்றின் படியும், தோல் பொருள் ஆய்வாளர்களின் பார்வையின்படியும் இத்திருக்கோயில் சுமார் 1300 ஆண்டுக்கு முற்பட்ட தென்றும், இதுவே பல்லவர் காலக் கட்டடக் கலைக்குச் சான்று பகரும் ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது. “ஸ்ரீ ’’ என்றால் லட்சுமி, “வித்யா’’ என்றால் சரஸ்வதி. இந்த இரண்டு ஸ்வரூபமும் சேர்ந்து அருகாட்சி புரிபவன்தான் ஸ்ரீ வித்யாம்பிகை. அபய வரத ஹஸ்தம் காட்டி நின்ற திருக்கோலத்தில் அருள் புரிகிறான்.
இந்த வித்யாம்பிகை ஆலயச் சிறப்பு என்ன வென்றால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் நாக தோஷமிருப்பின் திருமணம் விரைவில் கை கூடவும், தோஷம் நீங்கவும் இங்குள்ள நாகர் மேடையை வலம் வந்து அன்னையின் சந்நதியில் ஒரு விரலி மஞ்சளைக் கயிற்றில் கட்டிவிட்டு வழிபாடுகள் நடத்தி விட்டுச் சென்றால், உடனே நல்ல இடத்தில் அப்பெண் வாழ்க்கைப்படுகிறாள் என்பது ஐதீகம்.
அத்தோடு அனுபவித்தவர்களும் எடுத்துச் சொல்கிறார்கள். விரைவில் விவாகம் நடைபெறவரம் அருளும் இந்த வித்யாம்பிகையை திருமணமாகாத ஆண்களும் பெண்களும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள். இங்குள்ள ஸ்ரீ பீமேஸ்வரரைச் சுற்றியுள்ள பரிவார மூர்த்திகளான ஸ்ரீ விநாயகர், சுப்ரமணியர், சூரியன், பைரவர் ஆகிய விக்கிரகங்கள் அனைத்தும் விரல் வைத்தால் வெண்கல ஓசை எழுப்பும் சந்திரகாந்தக் கற்களால் ஆனவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும். காணும் கண்கள் மகிழவும் நினைக்கும் மனம் இனிக்கவும் செய்யக் கூடிய ஆலய சிறப்பு வழிபாடுகள் இங்கு நடைபெறுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். சிவபெருமானுக்குப் பிரதோஷகாலமும், ஸ்ரீ வித்யாம்பிகைக்கு பெளர்ணமி பூஜையும், தாமோதரப் பெருமாளுக்கு சத்ய நாராயண பூஜையும் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சிறப்பாக நடை பெற்று வருவதை காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். தினமும் சிவபெருமானுக்கு சோடச உபசார தீபாராதனைகள் சாயரட்சை பூஜை வேளையில் சிறப்பாகச் செய்யப்படுகிறது.
