திருவனந்தபுரம்: சித்திரை மாதப்பிறப்பு மற்றும் சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 18ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடை திறந்திருக்கும். சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.
இவ்வருட சித்திரை மாதப்பிறப்பு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கும்.
வரும் 15ம் தேதி சித்திரை விஷு பண்டிகை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஷுக்கனி தரிசனம் நடைபெறும். நேற்று நடை திறப்பை முன்னிட்டு தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்திருந்தனர். www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. வரும் 18ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
