ஆசாராம் பாபுவின் மகன் மனைவி விவகாரத்து ரூ.2 கோடி ஜீவனாம்சம் தர நீதிமன்றம் உத்தரவு

இந்தூர்: சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயிக்கு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாராயண் சாய் மீது மனரீதியான கொடுமை மற்றும் பிற குற்றச்சாட்டுக்களை சுமத்தி ரூ.5கோடி ஜீவனாம்சம் கோரி அவரது மனைவி இந்தூர் குடும்ப நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு விவகாரத்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி மாதம் ரூ.50 ஆயிரம் ஜீவனாம்சம் தராததால், அவரது மனைவி, நீதிமன்றத்தில் மனு செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த குடும்ப நீதிமன்ற நீதிபதி கடந்த 2ம் தேதி விவகாரத்து மனுவை ஏற்றுக்கொண்டார். மேலும் நாராயண் சாய் தனது மனைவி ஜானகிக்கு மூன்று மாதங்களுக்குள் ரூ.2 கோடி நிரந்தர ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: