நெல்லை, ஏப்.5: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், தேர்தல் அலுவலரிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் ரெட்டியார்பட்டி நாராயணன் கூறுகையில், ‘நாங்குநேரி சட்டமன்றத்தொகுதி வளர்ச்சி மிக்க தொகுதியாக, தமிழ்நாட்டில் நம்பர் ஒன் தொகுதியாக மாற்ற பாடுபடுவேன். பல்வேறு திட்டங்கள் இந்த தொகுதிக்கு கிடைக்காமல் அடுத்த தொகுதிக்கு சென்ற அவல நிலை இருக்கிறது. வரும் காலங்களில் இதுபோன்ற நிலைமை மண்ணின் மைந்தன் ஆகிய நான் சரி செய்து விடுவேன். நாங்குநேரி சட்டமன்றத்தொகுதியில் சிறப்பு தன்னிறைவு திட்டம் செயல்படுத்தப்படும். நாங்குநேரி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். களக்காடு பகுதியில் வாழை பதனிடும் தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சீவலப்பேரி ஆற்றுப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வேன். தொகுதியின் வளர்ச்சிக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மக்கள் பிரச்னை தீர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். வழக்கறிஞர் விஜய் ஜோசப், மாவட்ட துணை செயலாளர் முத்துலட்சுமி, செயற்குழு உறுப்பினர் சுனில் ராஜா,வெங்கடேஷ், நாராயணன், தெற்கு நாங்குநேரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவன், மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
