கூடலூர், ஏப். 9: கூடலூரில் திரிசூல காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு காளியம்மனுக்கு சிலை வடிவம் இல்லாமல் திருசூல வடிவில் வழிபடப்படுகிறது. மேலும், விழா காலங்களில் மட்டும் அம்மன் வடிவில் அலங்காரம் செய்யப்படும். இக்கோயிலில் பங்குனி திருவிழா, செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. புனித நல்ல தண்ணீர் தீர்த்தமான ராஜா கிணற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து கரகம் ஜோடிக்கப்பட்டது.
அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட காளியம்மன், ஊர்வலமாக கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று மெய்த்தலை மன்னாடி குளத்தில் கரைத்தனர். பங்குனி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
