சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது என இந்திய தேர்தல் ஆணைய உத்தரவை மேற்கோள்காட்டி ஆயத்தீர்வை ஆணையர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் மதுபானங்களை பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கிர்லோஷ் குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “டாஸ்மாக் கடைகள், பார்கள் இணைந்த கடைகள் என உரிமம் பெற்ற அனைத்து பார்கள் ஆகியவை, வரும் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் மூடப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
