கட்சி விரோத நடவடிக்கை ஜேடியு எம்பியை தகுதி நீக்கம் செய்ய கோரி நோட்டீஸ்

புதுடெல்லி: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனதா தள கட்சி எம்பி கிரிதாரி யாதவை தகுதி நீக்கம் செய்ய கோரி மக்களவை சபாநாயகரிடம் நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவர் கிரிதாரி யாதவ். இவர் பாங்கா மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். பீகாரில் அண்மையில் நடந்த பேரவை தேர்தலில் கிரிதாரி யாவின் மகன் சாணக்ய பிரகாஷ் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக கிரிதாரி யாதவ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட கிரிதாரி யாதவை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி நேற்று மக்களவை சபாநாயகரிடம் அக்கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் திலேஷ்வர் கமைத் இந்த நோட்டீசை அளித்துள்ளார்.

Related Stories: