ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து உரையாடினார். ஹார்முஸ் ஜலசந்தியை திறந்த நிலையில் வைத்திருப்பதன் முக்கியத்துவம் உட்பட மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் தொலைபேசி உரையாடல் இதுவாகும்.

அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு குறித்து மோடி வலியுறுத்தியதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையற்ற போக்குவரத்து இருப்பதை உறுதி செய்வதும் விவாதத்தின் முக்கிய அம்சமாக அமைந்திருந்ததாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட் பதிவில்,’அதிபர் டிரம்ப்பிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது.

மேற்காசிய சூழல் குறித்து நாங்கள் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டோம். இந்தியா பதற்றத்தைத் தணிப்பதையும், கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுப்பதையும் ஆதரிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறந்த நிலையிலும், பாதுகாப்பாகவும், அணுகக்கூடிய வகையிலும் இருப்பதை உறுதி செய்வது உலகிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மேலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முயற்சிகளில் தொடர்பில் இருக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய வாங்குபவராக இந்தியா இருப்பதால், ஹார்முஸ் வழித்தடத்தை மீண்டும் திறப்பதில் நேரடியான மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அக்கறை கொண்டுள்ளது என்று இந்தியா தரப்பில் அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: