புதுடெல்லி: சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி லாலு பிரசாத் யாதவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றப்பத்திரிக்கைகளையும் இந்த வழக்கு தொடர்பாக ஏற்றுக்கொண்ட பிந்தைய உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று லாலு கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்தர் துதேஜா, மனுவில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
