போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ரூ.30 கோடியில் இணைப்புச்சாலை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

ராஜபாளையம், மார்ச் 12: ராஜபாளையத்தில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் ரூ.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலை புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தென்காசி சாலை அரசு மருத்துவமனை வரையிலான இணைப்பு சாலை திறப்பு விழா புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி தலைமை வகித்தார். நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் லிங்குசாமி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்று சாலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், சீர்மரபினர் நலவாரிய துணைத் தலைவர் ராசா அருண்மொழி, நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், திமுக நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தர்மராஜா நன்றி கூறினார்.
இந்தச் சாலை ரூ.30 கோடி மதிப்பீட்டில் 2.1 கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்டுள்ளது.

செங்கோட்டை, தென்காசி பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்த பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோன்று புதிய பேருந்து நிலையத்திலிருந்து செங்கோட்டை, தென்காசி, கொல்லம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இதர வாகனங்கள் இந்தச் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். இது ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு ஒரு ஏதுவான சாலையாகும். இதன் மூலம் ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர ராஜபாளையம், புதுப்பாளையம், கடம்பன் குளம், செட்டிகுளம், நடுவக்குறிச்சி, இந்திரா நகர், ஸ்ரீரங்க பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு போக்குவரத்துக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

Related Stories: