முதன்மை கொள்கை ஆசிரியர் விருது: சென்னை ஐஐடி கவுரவிப்பு

 

சென்னை: பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு 2026ம் ஆண்டுக்கான முதன்மைக் கொள்கை ஆசிரியர் விருது வழங்கி சென்னை ஐஐடி கவுரவித்துள்ளது.  பள்ளி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை நல்ல முறையில் பயிற்றுவித்தும், அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்கள் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பாக பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னை ஐஐடி தேசிய அளவில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

கடந்த ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருது, ‘முதன்மைக் கொள்கை ஆசிரியர் விருது’ என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான ஐஐடி விருதுக்கு தேர்வுசெய்யபட்ட 6 ஆசிரியர்களுக்கு ஐஐடி இயக்குநர் காமகோடி நேற்று விருது வழங்கினார். அவர் வாழ்த்தி பேசும்போது, \\”ஒரு மாணவரின் எதிர்கால பணியை வடிவமைப்பதில் பள்ளி ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்களால்தான் மாணவர்களின் சிந்தனையையும் கற்றலையும் மேம்படுத்த முடியும்.

இத்தகைய உயர் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அந்த வகையில் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி ஐஐடி கவுரவிக்கிறது. இந்த விருது மற்ற ஆசிரியர்களுக்கும் உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்று நம்புகிறோம். இதன்மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.

தேசிய கல்விக்கொள்கை 2020ல் வலியுறுத்தப்பட்டுள்ளபடி நம்நாட்டில் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கப்பட வேண்டும்\\” என்றார். தொடர்ந்து பேசிய ஐஐடி டீன் (கல்வி) பிரதாப் ஹரிதாஸ், ”அடிப்படை அறிவியல் புரிதலுடன் ஐஐடியில் சேரும் மாணவர்கள் உயர்கல்வியிலும் வேலையிலும் சிறந்து விளங்குகிறார்கள். மாணவர்கள் சரியான வழியில் படித்தால் அறிவியல், பொறியியல் படிப்புகள் மிகவும் உற்சாகம் அளிக்கும்’’ என்றார்.

Related Stories: