நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக ஈரானில் உள்ள கிஷ் தீவில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். தற்போது ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மூண்டுள்ள சூழலில், அங்குள்ள மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, கடியப்பட்டணத்தைச் சேர்ந்த 136 மீனவர்கள் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டு, நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பெரும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். இதனால், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அங்குள்ள 136 மீனவர்களையும், மற்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களையும் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பங்கு பேரவை நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று மனு அளித்துள்ளனர்.
