பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி

திருப்பூர்: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.8.90 கோடியில் மாவட்ட மைய நூலக கட்டுமானப்பணி மற்றும் ரூ.37.50 லட்சத்தில் அவிநாசி சித்த மருத்துவ பிரிவு கட்டிட கட்டுமான பணி துவக்க விழா நேற்று நடந்தது. பணிகளை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த முறை உடுமலை வந்திருந்த போது நமது கோரிக்கையை ஏற்று நூலகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தற்போது ரூ.8.90 கோடி மதிப்பில் நூலகம் அமைக்கும் பட்சத்தில் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள இட நெருக்கடிகளை தவிர்த்து அமைதியான முறையில் இங்கு அமர்ந்து தங்களை தயார் செய்து கொள்ள ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை என அதிமுகவின் வசனங்கள் இனி பலிக்காது. 2019 நாடாளுமன்ற தேர்தல், தொடர்ந்து சட்டமன்ற தேர்தல், அதற்கு பின் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் மேற்கு மண்டலங்களில் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதே போல் வரும் தேர்தலிலும் மேற்கு மண்டலம் உட்பட தமிழகம் முழுவதும் 1996ம் ஆண்டு தேர்தலைப்போல இந்த தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: