முத்துப்பேட்டை, பிப். 27: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி ஆரம்ப விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். இதில் கண்காட்சியில் மாணவர்கள் ஒலிபெருக்கி, மின்சார மணி, நீரின் அழுத்தம், காற்றழுத்தம், எரிமலை வெடிப்பு, காந்த ஊசி செயல்பாடு,
பெரிஸ்கோப், இயற்கை உணவு, ஒளி விலகல், அஞ்சறைப்பெட்டி மூலிகை, செம்பருத்தி பூ டீ, நுரையீரல் சுவாசம், காற்று விரிவடைதல், நடனமாடும் மெழுகுவர்த்தி, கார்பன் டை ஆக்சைடு வாயு விரிவடைதல், எதிரொளிப்பு, மிதக்கும் ரொட்டி, இயற்கை நிறம் காட்டி போன்ற அறிவியல் செயல்பாடுகளைச் செய்து காட்டினர். பொதுமக்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டினர்.
