ஊட்டி,பிப்.27: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு பகுதிகளிலும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று அதனை வணிக ரீதியாக பயன்படுத்தி வரும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆரணி அவுஸ் பகுதியில் 2 கட்டிடங்கள் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று அதனை வணிக ரீதியாக பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கட்டிடங்களுக்கு நேற்று முன்தினம் மாலை சீல் வைக்கப்பட்டது. மேலும் இதுபோன்று குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்று வணிக ரீதியாக பயன்படுத்தி வரும் கட்டிடங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
