திருப்பூரில் நேற்று நடந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழ்நாடு முழுவதும் 23 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும் என்ற இந்த அரசின் சூளுரைக்கு ஏற்ப இல்லத்தரசிகள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் சென்று சேரும்படி ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் சிறப்பு உரிமை தொகையை நமது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இது போன்ற ஒரு நிகழ்வை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற பாஜ அரசின் முயற்சி அவர்களுக்கு பலன் அளிக்கவில்லை. ஒன்றிய அரசின் சூழ்ச்சி வலைகள் மற்ற எந்த மாநிலங்களில் அவர்களுக்கு பலனளித்தாலும் தமிழ்நாட்டில் உங்களது பருப்பு வேகாது. இதே போல பழனிச்சாமி ரூ.10 ஆயிரம் கருணைத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
யார் மீது கருணை வைத்து யாருக்காக வேண்டி இந்த பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தனி நபர் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சம் தொகை வழங்குவதாக அல்வா கிண்டி கொடுத்தார்கள். இப்போது புதிதாக அவருடன் இணைந்து கொண்டு இவரும் அல்வா கொடுக்க நினைக்கிறார்.
ஒன்றிய பாஜ அரசும், அவர்களுடன் கூட்டணியில் இணைந்துள்ள அதிமுகவும் ஒன்றாக கிண்டி தரும் அல்வாவை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டத்தில் வந்திருக்கும் அனைவருக்கும் தலா ஒரு அல்வா பொட்டலங்களை பொதுக்கூட்டம் முடிந்தவுடன் இந்த மேடையிலேயே உங்களுக்கு வழங்க இருக்கிறார்கள். எனவே, அல்வா கொடுக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கும், அவர்களுக்காக துணை நின்று அல்வா கிண்டும் வேலையை செய்து வரும் அதிமுகவுக்கும் வரும் தேர்தலிலே நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* ‘ஒரு லட்சம் கூட தர்றேன்னு அள்ளி விடுவாரு’
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்ரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: எடப்பாடி பழனிசாமி பொருளாதார நிபுணர் கிடையாது. ஏதோ காரணத்தினால் முதலமைச்சராக வந்தவர். சொல்வதை செய்ய போவதில்லை. அவர் அடிப்படையில் பெரிய அரசியல் தலைவர் கிடையாது. அவருக்கு நிர்வாகத் திறனும் கிடையாது. ரூ.10,000 என்பது அள்ளி விடுவது போல் தான் உள்ளது. முடியவில்லை என்றால் ரூ.1 லட்சம் தருகிறேன் என்று கூட கூறுவார். ஆனால் அடுத்து அவர் வர மாட்டார். முடிந்த கதை என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாம்.
மக்களின் ஆதரவை அதிமுக இழந்து சுக்குநூறாக போய்விட்டது. குறிப்பாக பாஜக கூட்டணியில் இணைந்ததால் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தால் அதிமுக 0.1% அளவிற்கு சென்று விடும். பாஜகவுக்கு அடிமையாகத்தான் அதிமுக இருந்து வருகிறது. சசிகலா இனி அரசியல் பேசி என்ன செய்ய போகிறார். அவர் அரசியலை விட்டு வெளியே சென்று விட்டார். இனி அவருக்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.
