தேனி, பிப். 25: தேனி வாரச்சந்தையில் இரண்டு தினங்களுக்கு காய்கறி வியாபாரிகளுக்கு வந்த ரூ.500 தாள்களில் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை கொடுத்த சிறுவனை அவர்கள் தேடியதில் தேனி புதிய பஸ் நிலையம் அருகே சிக்கினார். அவரை தேனி போலீசில் வியாபாரிகள் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த 17 வயது சிறுவன் உசிலம்பட்டியை சேர்ந்தவர் என்பதும், மதுரையில் உள்ளவர்கள் கொடுத்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக தேனி வந்ததும் உறுதியானது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவரிடம் கள்ள நோட்டுகள் கொடுத்தவர்கள் குறித்து, மதுரையில் விசாரித்து வருகின்றனர்.
